1-தெரிந்தது தான் ! ஆனால் புரிந்து கொள்ள முயன்றதில்லை ! நாம் அன்றாடம் செய்கின்ற சில செயல்களின் பின்னால் , ஒரு விஞ்ஞான விதி அடங்கி இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா ? நடைபெறுகின்ற காரியங்கள் எல்லாம் ஒரு காரணத்தோடு தான் நடக்கின்றன ; காரணம் இல்லாமல் காரியம் இல்லை காரியம் இல்லாமல் காரணமும் இல்லை ; விஞ்ஞானம் என்றால் என்ன ? காரியம் ஒன்று உண்டானால் காரணமும் உண்டு ; அந்த காரணம் எதுவென்று கண்டறிவது தான் விஞ்ஞானம் ; ஆமாம் : சரி தான் ; அந்த காரணத்தை ஏன் கண்டறிய வேண்டும் ? வேண்டாமா ? துன்பத்துக்கான காரணம் எதுவென்று கண்டால் தானே , அதை தீர்ப்பதற்கான வழியைத் தேட முடியும் ? வள்ளுவரும் அதைத்தானே சொன்னார் ? நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்று அவர் பாடவில்லையா ? முதலில் என்ன நோய் என்று பார்க்க வேண்டும் ; பிறகு அந்த நோய் ஏன் வந்தது என்று (அதாவது நோய் வந்ததற்கான காரணம் என்னவென்று) பார்க்க வேண்டும் ; அதற்கு என்ன செய்யலாம் என்று தீர ஆராய்ந்து , அதை சரியாகச் செய்ய வேண்டும் ; அப்படிச் செய்தால் தான் நோய் தீரும் ! 2- தெரிந்தது தான் ! ஆனால் புரிந்து கொள்ள முயன்றதில்லை ! பசிக்கிறது ! காரியம் ! காலையில் நீ சாப்பிடவில்லை ! இது காரணம் ! இப்பொழுது சாப்பிடு ! அது தான் தீர்வு ! கால் வலிக்கிறது ! காரியம் ! அதிகமாக நடந்திருப்பாய் ! இல்லையென்றால் காலில் அடிபட்டிருக்கும் இது காரணம் ! ஒன்று நடையை நிறுத்த வேண்டும் ; இல்லையென்றால் , அடிபட்ட இடம் எதுவென்று பார்த்து மருந்து போட வேண்டும் இது தீர்வு ; வெயில் அடிக்கிறது ; காரியம் ! வானத்தில் சூரியன் கொளுத்துகிறது ! இது காரணம் ; குடை பிடித்துக் கொள் ! இது தீர்வு ! வெயில் குறைவாக இருக்கிறதே ? காரியம் ! மேகமூட்டமாக இருக்கிறது ! காரணம் ! மழை வந்தாலும் வரும் ! இதற்கும் குடை தான் கொண்டு போக வேண்டும் ! தீர்வு ! விளையாடப் போன பையன் அழுகிறான் ! காரியம் ! யாராவது அடித்திருப்பார்கள் ! இல்லையென்றால் கீழே விழுந்திருப்பான் ; இது காரணம் ; சென்று பார்த்து , ஆறுதல் சொல்லி அவனைத் தேற்ற வேண்டும் ; இது தீர்வு ! இதெல்லாம் சரி ; உட்கார்ந்திருக்கிறோம் ! ஒரே புழுக்கமாக இருக்கிறது ; ஃபேனைப் போட கரண்ட் இல்லை ! விசிறியால் வீசுகிறோம் ! காற்று ஏன் வருகிறது ? 3- தெரிந்தது தான் ! ஆனால் புரிந்து கொள்ள முயன்றதில்லை ! விசிறியால் வீசினால் காற்று வருகிறது ; ஏன் ? இது என்னய்யா கேள்வி ? விசிறியால் வீசினால் , காற்று வராமல் வேறு எது வரும் : காற்று வரத்தானே செய்யும் என்பீர்கள் !தெரிந்தது தான் ! ஆனால் புரிந்து கொள்ள முயன்றதில்லை !கேளுங்கள் ! கடவுளாவது இல்லாத இடம் இருக்கலாம் ! ( சும்மா ஓரு பேச்சுக்கு ) ஆனால் காற்று இல்லாத இடமேயில்லை ; அதற்குக் காரணமே , காற்றைப் பற்றிய இந்த விதி தான் ; வெற்றிடத்தை ( vacuum ) நோக்கிக் காற்று வீசும் என்பதே அந்த விதி ! வெற்றிடத்தை நீ நிரப்ப வேண்டும் என்று இறைவன் காற்றுக்கு இட்ட கட்டளை என்று தான் கூற வேண்டும் ! சமநீதி சமநீதி என்றெல்லாம் பேசுகிறார்களே , நமது அரசியல்வாதிகள் ! ஆனால் காற்றுக்கு இருக்கின்ற இந்த சமநீதிக் கொள்கை , எந்த ஒரு நல்ல அரசியல்வாதிக்கும் கூட இருக்குமா என்பது சந்தேகம் தான் ! அதாவது தான் இல்லாத இடம் என்று எதுவும் இருக்கக் கூடாது என்பதுவே காற்றின் நிலையான ஒரே கொள்கை ; காற்றுக்கு சமயத்துக்கு ஏற்றமாதிரியான கொள்கை எல்லாம் கிடையாது ; அதனாலேயே வெற்றிடத்தை நோக்கி காற்று வீசுகிறது ! இதை நாம் அறியாமலேயே , விசிறியை இப்படியும் அப்படியும் அசைத்து , நமக்கு முன்னே , இருக்கின்ற சொற்ப அளவு காற்றையும் வெளியேற்று கிறோம் ! அதனால் , அங்கே ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது ! அந்த வெற்றிடத்தை நோக்கி , அதிக அளவு காற்று வேகமாகப் பாய்ந்து வருகிறது ! அவ்வாறு வருகின்ற காற்றின் குளுமையை அனுபவித்து மகிழ்கிறோம் ! மெதுவாக நாம் கையால் செய்கின்ற இந்த வேலையை , மின்விசிறி நமக்காக வேகமாகச் செய்கின்றது ; 4- தெரிந்தது தான் ! ஆனால் புரிந்து கொள்ள முயன்றதில்லை ! முழுமையாக நிரப்பப் பட்ட மைப்பேனாவை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஒரு உயரமான இடத்துக்குச் செல்கிறோம் ; அங்கே மை கசிந்து சட்டை கறையாகிறது ; ஏன் ? ( உயரத்தில் போகும்போது அலுங்காமல் குலுங்காமல் அப்படியே நடக்க முடியுமா ? ஆடி , அசைந்து நடந்து செல்வதால் , பேனா குலுங்கி குலுங்கி மை கொட்டுகிறது ; இது கூடவா தெரியாது என்பீர்கள் ! ) கொட்டும் என்று வேண்டுமானால் தெரிந்து இருக்கலாம் ; அதற்கும் மைப் பேனாவோடு மலை உச்சிக்குப் போயிருக்க வேண்டும் : ஆனால் ஏன் கொட்டுகிறது என்று பார்ப்போம் ! குறிப்பிட்ட ஒரு கன அளவில் , அடைபடும் ஒரு பொருளின் திண்மை யானது , ( அடர்த்தி ) ( density ) அங்கே நிலவும் அழுத்தத்திற்கு ( Pressure ) ஏற்ப மாறுபடும் என்பது விதி ! உயரம் கூடக்கூட அழுத்தம் குறையும் என்பதும் உயரம் குறையக் குறைய அழுத்தம் கூடும் என்பதும் விதியாகும் ! அதாவது உயரமும் அழுத்தமும் எதிர் ( தலைகீழ் ) விகிதம் எனவே , கீழே அதிக அழுத்தத்தில் நிரப்பப் பட்ட மை , மேலே செல்லச் செல்ல , உயரத்தில் அழுத்தம் குறைந்து , அதனால் திண்மையும் குறைந்து அது அடைபட்டுள்ள கன அளவின் பற்றாக்குறையால் இடம் போதாமல் மை வெளியேறுகிறது ! அக்கசிவினால் , சட்டை கறையாகிறது ! அழுத்தம் என்றால் என்ன ? திண்மை என்றால் என்ன ? என்று பார்ப்போம் ; 5- தெரிந்தது தான் ! ஆனால் புரிந்து கொள்ள முயன்றதில்லை ! ஒரு கூடையும் , அதை நிரப்புவதற்குத் தேவையான பஞ்சும் எடுத்துக் கொள்வோம் ; சாதாரணமாக கையில் பஞ்சை எடுத்து , கொஞ்சம் கொஞ்சமாகக் கூடையில் மேலே வரும் அளவுக்கு போடுவோம் ; கொஞ்சம் போட்ட உடனே கூடை நிறைந்து விடும் ; பஞ்சின் மேல் எந்த அழுத்தமும் இல்லை ; அதனால் பஞ்சில் திண்மையும் இல்லை ; கூடையில் அதிகமான பஞ்சும் இல்லை ; இது சாதாரணமான அழுத்தம் நிலவும் நிலை ! அடுத்தபடியாக , பஞ்சை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் போட்டுப் போட்டு , ஒரு கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டே இருந்தால் , அதிகப்படியான பஞ்சை அந்த கூடையில் நிரப்பலாம் ; இப்போது பஞ்சின்மேல் அதிகமான அழுத்தம் இருக்கிறது ; பஞ்சில் அதிகமான திண்மையும் இருக்கிறது ; கூடையில் அதிகமான பஞ்சும் இருக்கிறது ; இந்நிலையில் கொள்கலனின் கொள்ளளவு குறைவாக இருந்தால் போதும் ; இதுதான் கீழே உயரம் குறைவான இடங்களில் அழுத்தம் நிலவும் நிலை ; அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கின்ற கையை , மேலே தூக்கத் தூக்க பஞ்சும் மேலே மேலே வந்து கொண்டிருக்கும் ; அதாவது அழுத்தம் குறையக் குறைய திண்மை குறைந்து கொண்டே வருகிறது ; இந்நிலையில் கொள்கலனின் கொள்ளளவு அதிகமாக இருக்க வேண்டும் ; இல்லையென்றால் பஞ்சு வெளியே வரத்தான் செய்யும் ; இந்த திண்மை இயற்கையாகவே அதிகமாக உள்ள பொருட்களும் இருக்கின்றன ; குறைவாக உள்ள பொருட்களும் இருக்கின்றன ; இப்படித்தான் உயரத்தில் மைப் பேனா கசிந்து கொட்டுகிறது ! 6 தெரிந்தது தான் ! ஆனால் புரிந்து கொள்ள முயன்றதில்லை !வெய்யில் காலத்தில் வெட்டி நடப்பட்ட ஒரு மரக்கிளையை விட , மழைக்காலத்தில் வெட்டி நடப்பட்ட கிளை விரைவாகத் துளிர்க்கிறது ; ஏன் ? ( வெய்யில் காலத்தை விட , மழைக்காலத்தில் அதிக தண்ணீர் கிடைக்கும் என்பீர்கள் ! ) ஒரு வகையில் அது உண்மைதான் ; அதனால் என்ன ஆகின்றது என்று தெரிய வேண்டுமல்லவா ? மனிதனுக்கும் பல்வேறு உயிரினங்களுக்கும் எப்படி அவற்றின் உறுப்புகள் பலவகைகளில் பயன்படுகின் றனவோ அதைப்போலவே , தாவரங்களுக்கும் அவற்றின் இலை கிளை பூ தண்டு வேர் போன்ற பாகங்கள் உதவுகின்றன ;தாவரங்கள் தங்கள் இலைகளின் மூலமாக ஒளிச்சேர்க்கை என்ற செயலின் மூலமாக உணவைச் சேர்த்து வைக்கின்றன என்பதோடு , முக்கியமாக அந்த இலைகள் தாங்கள் உயிர்வாழத் தேவையான , நீராவிப் போக்கு ( transpiration ) என்னும் செயலைச் செய்ய வேண்டும் என்பது விதியாகவே வகுக்கப் பட்டிருக்கிறது ! இது தமக்குக் கிடைக்கும் நீரின் அளவை சம நிலையில் வைத்துக் கொள்வதற்காக ஆகும் ; ( அவ்வாறு சம நிலையில் வைத்துக் கொள்ளவில்லை என்றால் , செடி அழுகி இறந்து விடும் இதையும் மீறி அழுகி விடுவதும் உண்டு ) நீராவிப்போக்கு இலைகளின் வழியாகத்தான் நடைபெறுகின்றன , என்பதால் , தேவை கருதி இலைகளை அதிகமாக்குவதும் குறைப்பதுவும் ஆகிய நடவடிக்கைகளை தாவரங்கள் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கின்றன 7-- தெரிந்தது தான் ! ஆனால் புரிந்து கொள்ள முயன்றதில்லை ! வெய்யில் காலத்தில் எவ்வளவு நீர் ஊற்றினாலும் , சுற்றுப்புறத்திலுள்ள வெப்பத்தின் காரணமாக , நீரின் அளவு அதைப் பாதிப்பதில்லை ; ஏனென்றால் கிடைக்கின்ற நீர் போதுமானதாக இல்லை ; அதோடு அதிக இலைகள் இருந்தால் , இருக்கின்ற நீரையும் அவை வெளியேற்றிவிடும் ; இதனாலேயே கோடைகாலத்தில் இலைகள் பழுத்து உதிர்கின்றன ; இலையுதிர்காலம் என்று நாம் சொல்கிறோம் இதை தாவரங்கள் தங்கள் இலைகளை உதிர்க்கும் காலம் என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் மழைக்காலத்தில் நிலைமை வேறு ; தங்கள் பாதுகாப்புக்காக சுற்றுப்புறத்திலும் , வேருக்கு அடியிலும் தேங்கி நிற்கும் தண்ணீரை , அவை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன; இல்லையென்றால் , விரைவில் அவை அழுகிவிடும் எனவே இலைகளை அதிகப்படியாக வெளிவிட்டு அவற்றின் வழியாக நீரை வெளியேற்றுகின்றன ; அதனால் தான் வெய்யில் காலத்தைவிட மழைக் காலத்தில் தாவரங்கள் விரைவாகத் துளிர்க்கின்றன. அதன் காரணமாக தாவரங்கள் பசுமையாகக் காட்சியளிக்கின்றன ஒரு கிலோ பஞ்சு , மற்றும் ஒரு கிலோ இரும்பு ஆகியவற்றில் எது அதிக கனமாக இருக்கும் என்று கேட்டால் என்ன சொல்வோம் ? இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன ? ஏன் ? பஞ்சை விட இரும்பு கனமாக இருக்கும் என்போம் !ஒருவேளை நீங்கள் அப்படிச் சொல்லாமல் இருக்கலாம் ! இரண்டும் ஒரே எடை தானே ; அதனால் ஒரே கனம் தான் ; 8-- தெரிந்தது தான் ! ஆனால் புரிந்து கொள்ள முயன்றதில்லை ! ஆனால் , இரும்பை அடைக்கத் தேவைப்படும் இடத்தை விட , பஞ்சை அடைக்க அதிக இடம் தேவை ! ஏனென்றால் பஞ்சின் அடர்த்தியை விட , இரும்பின் அடர்த்தி அதிகம் ! இது இயற்கையாக அமைந்த அடர்த்தி ; பஞ்சை எடை போடும் படிக்கல் சிறிதாகவும் , பஞ்சு மூட்டை பெரிதாகவும் இருப்பதை பார்த்திருப்பீர்கள் ஆனால் இந்த எடை உயரே செல்லச் செல்ல கொஞ்சம் குறையும் ; ஏனென்றால் ஈர்ப்பு விசையும் மாறும் , பொருட்களுக்கு எடை தருவது ஈர்ப்பு விசை என்றும் ஒரு விதி இருக்கிறது ; ஈர்ப்பு விசை இல்லை என்றால் எடையும் இல்லை ; அதனாலேயே , மேலிருந்து உருட்டி விடப்பட்ட பாறை கீழே வர வர வேகமாக உருள்கின்றது மேலே வீசப்பட்ட பந்து கீழே வருவதற்கும் , மரத்தில் பழுத்த பழங்கள் கீழே விழுவதற்கும் இந்த ஈர்ப்பு விசையே காரணம் ; இல்லாவிட்டால் பந்தும் பழமும் மேலேயே போய்விடும் ; இல்லை , அப்படியப்படியே தொங்கும் ; பேரண்டத்தில் , அந்தரத்தில் கிரகங்கள் தொங்குவதற்கும் இந்த ஈர்ப்பு விசைதான் காரணம் ; ஒவ்வொரு கிரகத்துக்கும் வெவ்வேறு அளவில் ஈர்ப்பு விசை இருக்கிறது ; பத்துப் பதினைந்து பேர் வட்டமாகச் சுற்றி நின்று கொண்டு , ஒருவர் கையை மற்றோருவர் கோர்த்துக் கொண்டு அப்படியே மல்லாந்து சாய்ந்தால் யாரும் விழ மாட்டார்கள் ; ஒருவர் பிடி விலகி விட்டால் எல்லோரும் விழுவார்கள் ; இந்த பிடியைப் போன்றது தான் கிரகங்களின் ஈர்ப்பு விசையும் ; 9-- தெரிந்தது தான் ! ஆனால் புரிந்து கொள்ள முயன்றதில்லை ! இது ஒரு கணக்கு 100 மீட்டர் தூரத்திலுள்ள ஒரு இடத்துக்கு , 10 நிமிடத்தில் செல்ல வேண்டுமானால் , ஒரு வண்டியின் சக்கரம் 100 சுற்றுகள் உருள்கிறது : அதே இடத்துக்கு , அதே வண்டியில் 5 நிமிடத்தில் செல்லவேண்டுமானால் , அந்த வண்டியின் சக்கரம் எத்தனை சுற்றுகள் உருளும் ? எப்படி ? ( 200 சுற்றுகள் , அல்லது 50 சுற்றுகள் என்பீர்கள் கணக்கு போட்டுப் பார்த்தால் அப்படி சொல்ல மாட்டோம் ) தெரிந்தது தான்! ஆனால் புரிந்து கொள்ள முயன்றதில்லை ! அதே 100 சுற்றுகள் தான் என்பது விடை ! எப்படி என்று பார்ப்போம் ! அந்த சக்கரம் ஒரு சுற்று உருளும்போது , அது எவ்வளவு தூரம் நகரும் ? அதன் சுற்றளவு எவ்வளவு இருக்கின்றதோ அவ்வளவு தூரம் தானே நகரும் ; அந்த கணக்கில் பார்த்தோமானால் , அந்த இடம் 100 சுற்றுகள் தொலைவிலே தான் இருக்கிறது ; அதாவது 100 மீட்டர் தொலைவில் உள்ள அந்த இடத்துக்குச் செல்ல 100 சுற்றுகள் உருள்கிறது ; ஆக , ஒரு சுற்றுக்கு 1 மீட்டர் செல்கிறது ( இது அதன் சுற்றளவு ) ; ஆகவே அந்த இடத்தை , எவ்வளவு நேரத்தில் அடைய வேண்டும் என்றாலும் அது 100 சுற்றுகள் தான் உருள வேண்டும் ; குறைவான எண்ணிக்கையில் உருண்டால் அந்த இடத்தை அடைய முடியாது ; அதிகமான எண்ணிக்கையில் உருண்டால் அந்த இடத்தைத் தாண்டி விடும் ; ஆனால் , செல்லும் வேகம் மாறுபடும் ! 10 நிமிடத்தில் சென்ற தூரத்துக்கு 5 நிமிடத்தில் செல்ல வேண்டுமானால் , முன்பு சென்ற வேகத்தை விட , இரண்டு மடங்கு வேகத்தில் செல்ல வேண்டும் ! அதாவது முன்பு 10 கிலோமீட்டர் வேகம் என்றால் இப்போது 20 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் ; இது விதி அல்ல ! கணக்கு ! ஆனால் , கணக்கும் விதியும் ஒன்று தான் ;

No comments:
Post a Comment