ஜீவஹாருண்யம்
அன்பே கடவுள்! வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்!
God is love! Love is god! Where love is; There God is!
உயிர்களிடத்து அன்பு வேண்டும், என்பதை வெளிப்படுத்தும் சொற்றொடர்கள் இவை! அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும், என்பது அவசியம் தான்! ஆனால் அதில், நடைமுறையில், சில விதிவிலக்குகளும் இருக்கின்றன, என நாம் உணர வேண்டும்!
முதலில் நமது முன்னோர்கள், உயிர்களிடம் எவ்வாறு அன்பு காட்டினார்கள், என்று பார்ப்போம்!
இரைக்காக, பருந்து விரட்டி வந்த புறா ஒன்று, அடைக்கலம் என்று கூறி, மன்னன் சிபியின் மடியில் விழுந்தது! புறாவைத் தூக்கி எடுத்த சிபி, புறாவையும் காப்பாற்ற வேண்டும்; பருந்தின் பசியையும் போக்கவேண்டும் என்று, தன் தொடையிலிருந்து தசையை அரிந்து கொடுத்துப் பருந்தின் பசியைப் போக்கினான்!
"அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு"
வேடனின் அம்பு பட்டு, வீழ்ந்த புறாவுக்கு மருந்திட்டுக் கட்டி, காயத்தைக் குணமாக்கி, பறக்கவிட்டு மகிழ்ந்தவர் புத்தர்!
அதோடு, பலியிடுவதால், பலன் ஒன்றுமில்லை! பாவம் தான் வரும், என்று எடுத்துக் கூறி, ஒரு மன்னன், யாகத்தில் பலியிடக் கொண்டு சென்ற மாடுகளைக் காப்பாற்றியவர், புத்தர் பெருமான்!
"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்,
உயிர்செகுத் துண்ணாமை நன்று"
ஆடுகளை மேய்த்துப் பசிநீக்கி, நடக்கமுடியாத ஆடுகளைத் தன் தோளில் சுமந்து மகிழ்ந்தவர் இயேசு பெருமான்!
வைகுண்டம் சென்ற வழியில், நோயுற்றுத் தள்ளாடி, அவல நிலையில் இருந்த ஒரு நாயை, அதன் காயங்களிலிருந்து வடிந்த சீழையும் பொருட்படுத்தாமல், தன் தலையில் தூக்கிச் சுமந்தவன், பாண்டவ தர்மன்!
"விருந்து புறத்ததாத் தானுண்டல்; சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று"
பசுவின் கன்றை, தேர்க்காலில் நசுக்கிக் கொன்றவன், தன் மகன் என்றும் பாராமல், அதே தேர்க்காலை ஏற்றி, நசுக்கித் தன்மகனைக் கொன்று நீதியை நிலை நாட்டியவன், மனுநீதிச் சோழன்! இவ்வாறு உயிர்கள் அனைத்துக்கும், கருணை காட்டியவர்கள்தான் நமது முன்னோர்!
தற்போது, மிருக வதை கூடாது என்பதை வலியுறுத்த பல்வேறு அமைப்புகள் தோன்றியுள்ளன. அவற்றுள் பிரபலமானது, S.P.C.A.(Society for Prevention of Cruelty to Animals) எனப்படும், மிருக வதை தடுப்பு சங்கம் ஆகும்!
செல்லமாக வளர்க்கும் பிராணிகளை நல்முறையில் வளர்க்கவேண்டும்!
வண்டியிலோ, ஏர்களிலோ பூட்டப்படும் மாடுகளைத் துன்புறுத்தக் கூடாது! அவற்றை, நல்ல முறையில் உணவிட்டுப் பராமரிக்க வேண்டும்!
சுதந்திரமாகத் திரியும் பறவைகளையும் விலங்குகளையும் பிடித்துக் கூண்டில் அடைக்கக் கூடாது! அப்படிப் பிடித்து அடைத்தாலும், அவற்றை நல்லபடியாகக் கவனிக்க வேண்டும்!
போன்ற விதிமுறைகளை வகுத்துள்ளன!
எல்லாம் சரிதான்! ஆனால் நமக்குத் துன்பம் தருபவற்றைக்கூட ஒன்றும் செய்யக்கூடாது, என்று விநோதமான கட்டுப்பாடுகளையும் விதிக்க ஆரம்பித்துள்ளன! அதாவது மனித உயிர்களை விட விலங்குகளின் உயிர்கள் மேலானது என்று ஆகிவிட்டது!
தெருநாய்கள் கூடி ஒரு சிறு பையனை இழுத்துச் சென்று தின்று விட்டது!
ஒரு நாய் கடித்துக் குதறி, ஒரு குழந்தையைக் கொன்று விட்டது!
நள்ளிரவில் கிராமத்துக்குள் புகுந்து, பலபேரைக் கடித்து சிறுத்தை அட்டகாசம்!
வயல்களில் பயிரிடப்பட்டிருந்த, கரும்பு, வாழைப் பயிர்களை அழித்து யானைகள் அட்டகாசம்!
சாலைகளின் குறுக்கே நின்று யானைகள் மறியல்!
போன்ற செய்திகள், நம் மிருக வதைக் கொள்கைக ளில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகின்றன என இவர்கள் ஏன் இன்னும் உணரவில்லை என்பது வியப்பளிக்கிறது!
"வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடதாரி, ஆங்கதனுக் காகாரம் ஆனாற்போல்" என்கிறது ஒரு நாலடியார் பாடல்!
ஒரு மனிதன் கொடுஞ்செயல் செய்தால் தவறு! ஆனால் அதை ஒரு விலங்கு செய்தால், தவறில்லையா?
தன்னைக் கொல்லவரும் பாம்பைக் கொல், என்கிறது ஒரு பழைய மொழி!
"கொலையிற் கொடியாரை வேந் தொறுத்தல், பைங்கூழ் களைகட் டதனொடு நேர்" என்றும் வள்ளுவம் கூறுகிறது!இது மனிதருக்கு மட்டு மல்ல; விலங்குகளுக்கும் பொருந்தும்!மன்னராட்சியில் மன்னர்கள் வேட்டைக்குச் சென்றது, பொழுது போக்குக்காக அல்ல! விலங்குகளை ஒரு கட்டுப்பாட்டில் வைக்கத்தான்! இன்று அத்தகைய பயம் விலங்குகளுக்கு இல்லாமற் போய்விட்டது!
ஜீவஹாருண்யம், இப்படி ஆகிவிடக் கூடாது!
ஒரு துறவியார் இருந்தார்! உயிர்களிடத்து அன்பு செயல் வேண்டும் என்னும் கொள்கை உடையவர் அவர்! எந்த உயிரையும் வருத்தமாட்டார்! அவை
வருந்துவதைப் பார்க்கச் சகிக்கவும் மாட்டார்!
நண்பகற்பொழுதில், நல்ல வெயிலில், ஊருக்கு வெளியே குளக்கரையிலிருந்த ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து, தன்னை ஆசுவாசம் செய்துகொண்டிருந்தார்!
பக்கத்தில் ஒரு புற்றில், எறும்புகள், சாரை சாரையாகத் தங்கள் வாயில் இரைகளைக் கவ்வி எடுத்துசென்ற காட்சியைக் கண்டு மகிழ்ந்தார்!
குளத்தில் அவர் பார்வை திரும்பியது! அந்தோ! ஒரு எறும்பு நீரில் விழுந்து தவித் துக் கொண்டிருந்தது! திடுக்குற்ற துறவி யார், நீளமாகத் தான் வளர்த்திருந்த தாடி யின் நுனியை, நீரில் கிடந்த எறும்பின் பக்கத்தில் தொங்கு மாறு செய்தார்! எறும்பு தாடியின் முனையைப் பற்றிக் கொண்டது! மனம் மகிழ்ந்த துறவியார், அப்படியே எறும்போடு, புற்றுக்கு அருகில் வந்து, எறும்பு இறங்கிச் செல்லட்டும் என்று, தன் தாடி முனையை புற்றின் மேல் தொங்கவிட்டார்! தாடியிலிருந்த எறும்பு இறங்கிச் செல்வதற்குப் பதிலாக, புற்றிலிருந்த எறும்புகள் வரிசையாக அவர் தாடியில் ஏறி அவரைக் கடிக்கத் தொடங்கின! வலி பொறுக்காமல் உதறிப் பார்த்த துறவியார், அவை இறங்காமல், மேலே மேலே ஏறியதால், இருகைகளையும் தாடியோடு சேர்த்துத் தேய்த்து, நசுக்கி, எறும்புகளைக் கொன்றார்! அவருடைய ஜீவஹாருண்யம் கடைசியில் இந்த நிலைக்கானது! இதனால், அவர் ஜீவஹாருண்யம் இல்லாதவரென்று பொருளல்ல! அதிலும் சில விதி விலக்குகள் உள்ளன என்று புரிந்து கொள்ளாத ஜீவஹாருண்யம்!
உலகில் நாம், உற்பத்தி செய்கின்ற மொத்த உணவுப் பொருளில், பதினைந்து சதவீதத்தை, எலிகள் நாசம் செய்கின்றன, என்ற கணக்கு நம்மைக் கவலை அடையச் செய்கிறது! ஒரு எலியைக் கொன்றால், பத்து ரூபாய் என்று வரும் அளவுக்கு அதன் தொல்லை அதிகரித்திருக்கிறது!
ஆஸ்திரேலியாவில்,கங்காருக்களின்எண் ணிக்கை அந்நாட்டு மக்கள் தொகையை விட அதிகமாகி விட்டபடி யால், அதற்கு என்ன தீர்வு அவற்றை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்!
கொலை செய்த ஒருவனைத் தூக்கில் போடலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்! ஏனென்றால், அது ஜீவஹிம்சை!
ஐந்து வயதுச் சிறுமியைக் கற்பளித்து, அவளைக் கொன்றும் புதைத்துவிட்ட ஒரு காமுகக் கொலைகாரனுக்கும் கருணை காட்ட வேண்டும்?
"பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே" என்று, பாரதி இதைத்தானா பாடினான்?
நூறு பேரைக் கொன்ற ஒரு தீவிரவாதிக்கு வாதாட, மனித உரிமைக் கழகம், வரிந்து கட்டி வருகிறது! அவனால் நூறு குடும்பங்கள் நாசமானதைப் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை! இன்று தீவிரவாதிகள் நம்மவர்களையே பணயக் கைதிகளாகப் பிடித்துச் சென்று நமக்கே சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்! வளர்ப்புப் புறாவைத் தாக்கிக் கொல்லப் பாய்ந்து வருகிறது ஒரு பூனை! கருணை எதற்குக் காட்ட வேண்டும்? பூனைக்கா? புறாவுக்கா? விலங்குகளிடம் கருணை காட்ட வேண்டும் என்றால் எந்த விலங்குக்கு?
கொள்ளையடித்து விட்டுத் தப்பிச்செல்லும் ஒரு திருடன் காவலர்களைத் தாக்கிக் கொன்றாலும் கவலை இல்லை! அவனைச் சுடக்கூடாது என்று அவனுக்குத் துணை போகின்றன, இந்த ஜீவஹாருண்ய சங்கங்கள்!
அவர்கள் பார்வையில், கொலை செய்பவர்கள், கொள்ளையடிப்பவர்கள் மற்றும் பெண்களைக் கற்பளிப்பவர்கள் ஆகியோர்தான் பரிதாபப் படத்தக்க மனிதர்கள்! அவர்களுக்குத்தான் கருணை தேவை!
உணவுக்காக உயிர்களை வதைக்கலாம்! ஆனால் உபத்திரவம் செய்கின்ற அவற்றை தண்டிக்கக் கூடாது! கருணை, விலங்குகளுக்கு மட்டுமே! காட்டப் படவேண்டும்! மனிதர்களுக்கு அது தேவையில்லை! இதுதான் இன்றைய ஜீவஹாருண்யம்!
"துஷ்ட நிக்ரஹம்; சிஷ்ட பரிபாலனம்" என்று கீதை சொன்னதை, மறந்து விட்டோம்!
இவ்வுலகில் அனைத்து உயிரினங்களும் ஒரு சம நிலையில் இருக்கவேண்டும் என்று தான் ஒன்றுக்கு மற்றொன்று என்ற கணக்கில் படைக்கப் பட்டுள்ளன! நிலைக்கு ஏற்றவாறு, காரண காரியத்தோடு, என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்து, நம் ஜீவஹாருண்யத்தைத் தொடர்ந்து, மனித உயிர்களையும், மற்ற உயிர்களையும் மதித்துக் காப்போமாக! காரண காரியம் இல்லாத எந்தச் செயலுக்கும் அர்த்தம் இல்லாமற் போய்விடும்!
"இளைதாக முள்மரம் கொல்லுக; களையுனர்,
கைகொல்லும் காழ்த்தவிடத்து" -------குறள்