என்மனைவிஎன்னோடுஇல்லை!
அம்மிமிதித்துஅருந்ததி பார்த்து,
கால் பிடித்த என்முன்,
நாணித் தலை குனிந்து
என் கை பிடித்துக் கொண்டு,
உடலால், உள்ளத்தால்என்றும்,
உங்களைக் கூடியே
இருப்பேன், என்று,
ஊரார் முன் வாக்குக் கொடுத்த,
என் மனைவி,என்னோடு இல்லை!
உடலால் அவள் உள்ளாள்,எனினும்,
உள்ளத்தால்,எனைப் பிரிந்து சென்று விட்டாள்!
அந்திப் பொழுதில் அணையாவிளக்கேற்றி
அறையெல்லாம் மணக்கும் வாசத் தூபமிட்டு
கிணிகிணியென்னும் மணியோசை தவழ
கற்பூரம் காட்டி நெற்றிக்குப் பூதியிட்டு
கண்ணாய் எனைநாளும் கவனித்து இன்றோ
வீட்டை இருளடைய விட்டுவிட்டு வேறோர்
வீட்டுக்குச் சென்றுவிட்டாள்!
விழிபூக்க வைத்துவிட்டாள்!
என் மனைவி என்னோடு இல்லை!
உடலால் அவள் உள்ளாள்;எனினும்,
உள்ளத்தால்எனைப் பிரிந்து சென்று விட்டாள்!
குளித்து முழுகி வாசலைத் தெளித்துக்
கோலம் போட்டு, அள்ளிச் சொருகிய
கூந்தலுடன்,காபியோடு வந்து,
என்னைத் துயில் எழுப்பியவள்,
நான் எழுந்தேனா இல்லையா?
என்று கூடக் கவலைப் படாமல்,
வேறு ஒருவனுக்குக் காபி கொடுக்கச்
சென்றுவிட்டாள்;
என் மனைவி என்னோடு இல்லை!
உடலால் அவள் உள்ளாள்;எனினும்,
உள்ளத்தால்,எனைப் பிரிந்து சென்று விட்டாள்!
இது பிடிக்குமா உங்களுக்கு?
எது பிடிக்கும் என்றெல்லாம்,
கேட்டுக் கேட்டு,என் சுவை அறிந்து
எனக்குச் சமைத்துப் போட்டவள்,
நான் சாப்பிட்டேனா இல்லையா?
என்றுகூடக் கவலைப் படாமல்,
வேறு ஒருவனுக்குச் சமைத்துப் போடச்
சென்றுவிட்டாள்;
என் மனைவி என்னோடு இல்லை!
உடலால் அவள் உள்ளாள்,எனினும்,
உள்ளத்தால்,எனைப் பிரிந்து சென்று விட்டாள்!
வீட்டார் மகிழ, ஊரார் பெருமையடைய,
தோள் கொடுத்து உங்கள் துணையாய் நிற்பேன்
சேர்ந்தே வருவேன்என்று,
என்னைச் சார்ந்தே இருந்தவள்,
இன்று நான் சோர்ந்துவிட்டேன்
என்றுகூடத் தெரிந்து கொள்ளாமல்,
வேறு ஒருவன் வீட்டுக்குச்
சென்றுவிட்டாள்;
என் மனைவி இன்று என்னோடு இல்லை!
உடலால் அவள் உள்ளாள்;
எனினும் உள்ளத்தால்
எனைப் பிரிந்து சென்று விட்டாள்!
சிரித்துப் பேசி
என் சிந்தையை மயக்கியவள்
வருத்தம் தீர்க்கஎன்னை
வாஞ்சையாய் நோக்கியவள்
வாடுகிறேன் நானென்று
ஒன்றும் தெரியாமல்
இருக்கும் ஊர் விட்டு
வேறூர் சென்றுவிட்டாள்
என் மனைவி என்னோடு இல்லை!
உடலால் அவள் உள்ளாள்,எனினும்,
உள்ளத்தால் எனைப் பிரிந்து சென்று விட்டாள்!
பெண்ணுக்கு மணமாகி
புகுந்த வீடு சென்றாளாம்!
மாப்பிள்ளையோடு
மறுவூர் சென்றாளாம்!
மாசம் மூன்றின் பின்
மசக்கை எனக்கென்று
உதவிக்கு அழைத்தாளாம்!
அடிசக்கைஎனச் சென்றவள் சென்றவள்தான்!
கட்டியவன் சிந்தனை கடுகளவும் இல்லாமல்
பெண்ணுக்குச் சமைக்கப் போனவள் போனவள்தான்!
உற்றதுணை இல்லாமல், ஊண் உறக்கமின்றி
உள்ளத்து வேதனையில் உடலும் மாய்ந்துவிட்டேன்!
சுற்றமென உடனிருந்து சோர்வை மாற்றியவள்,
வெற்றிடமாய் எனைமாற்றி விட்டதனால், ஓய்ந்துவிட்டேன்!
பெற்று வளர்த்திடவும் பிள்ளைகளால் வேதனைதான்!-வளர்த்து
படிக்க வைத்திடவும் படுகின்றோம் வேதனைதான்!-படித்து
வேலைஒன்று தேடிடவும் வந்திடுமே வேதனைதான்!-கல்யாண
வரனோ வரன் என்று வாடுகிறோம் வேதனையில்!-தேடி
மணத்தை முடித்திடவும் மயங்குகிறோம் வேதனையில்!
எல்லாம் முடித்தோம்;இனி எல்லாம் சுகமென்று
இருந்து ஓய்வெடுத்தால் இன்னும் வேதனையா?
பிள்ளைகளால் பெற்றவர்க்கு எப்போதும் தொல்லைகளோ?





























