Pages

Monday, May 28, 2012

55 ThaanthonReeswarar





அருள்மிகுஸ்ரீஅமிர்தவல்லிசமேத
ஸ்ரீதான்தோன்றீஸ்வர
ஸ்தோத்திரப்பதிகங்கள்
========================



விநாயகர் துதி
===========
வெள்ளையாடை அணிந்தோய் போற்றி!
விஷ்ணுவுக்கு உகந்தோய் போற்றி!
நிலவு போன்ற நிறத்தோய் போற்றி!
நான்கு புஜங்கள் உரித்தோய் போற்றி!
புன்னகை தவழும் முகத்தோய் போற்றி!
இன்னல் யாவும் தீர்ப்பாய் போற்றி!
ஒற்றைக் கொம்பை உடையாய் போற்றி!
செற்றோர் அழிக்கும் செல்வா போற்றி!
அரவம் அணிசெயும் இடையோய் போற்றி!
அமிர்த வல்லியின் புதல்வா போற்றி!
தான்தோன்றி ஈசனின் தனயா போற்றி!
தாள்பணிந் தோமே போற்றி போற்றி!
1
முக்கண்ண! உன்தேரை ஒடித்தாண்டு முடிவினில்
மூண்டபகை போக்கியருளும்,
முப்பத்து முக்கோடி தேவர்தமைக் காப்பதில்
முதல்வனென் றாகியருளும்,
எக்கணமும் துதிப்போர்க்கு ஏற்படும் இடரெனில்
எதிர்நின்று நீக்கியருளும்,
இளையவருந் தம்பியின் மணவினை உதவியினில்
யானைவடி வேற்றுவருளும்,
தக்கனென மாங்கனியைப் பெற்றிந்த  வாழ்வினில்
தாய்தந்தை உலகென்றருளும்,
தந்திமுகக் கணபதியும் முந்திவரும்  பாங்கினில்
தவக்கோலம் பூண்டசிவனே!
தக்கவல யாம்செயினும் தடைகடீர்த் தாள்வதில்
தான்முந்தி ஒரகையருளும்
தான்தோன்றி ஈசனே! அமிர்தவலி உடனுறையும்
தம்பதிச மேதபோற்றி!
2
பழம்வேண்டி நின்றானும்  பழமாக ஆனவனும்,
பண்புடன் முன்பு நிற்கும்,
பணிவோர்க்கு உற்றகுறை தீர்த்திடற் கேயெனினும்,
பறந்துவந் தெதிரில்நிற்கும்,
அழவேண்டி என்பிறவி அமைந்ததே தானெனினும்,
அஞ்சலென வேலெடுக்கும்,
அழிவுற்ற தறிவற்ற சூரர்கள் தாமெனினும்,
அவருக்கும் அருள்கொடுக்கும்,
பழிநீக்கி இந்திரனின் பரிவாலே மருகனெனும்,
பதவிக்கு இசைவுதந்தும்,
பாடிவரு வள்ளியவள் பால்கொண்ட நேசமெனும்
பழமையால் வாழ்வுதந்தும்,
தொழுவோரைக் காப்பவன்  சுடர்தந்த வாறுமுகம்
சுப்ரமணி யிடமிருக்கும்,
தான்தோன்றி ஈசனே! அமிர்தவலி உடனுறையும்,
தம்பதிச மேதபோற்றி!
3
ஊன்தோன்றி அன்னையவள் உடல்வலியில் நான்தோன்றி,
ஓய்வின்றி தந்தையுறவும்,
உற்றாரும் மற்றாரும் உதவிடான் என்றிகழ,
உற்றவகை யற்றபோதும்,
ஏன்தோன்றி னோமென்று இம்சையில் வாடுவகை,
எம்பிறவி யளித்தபோதும்,
இயலாமை பிணிமூப்பு பசிக்கொடுமை வறுமையென,
எத்தனை துயர்களெனினும்,
வான்தோன்று முனதுகரு ணையமுது உண்டிங்கு,
வாழுநெறி உதவுதற்காய்,
வழிசெய்ய வேண்டுமென வறியரெமைக் காக்கவென,
வன்காட்டில் தேடிடாமல்,
தான்தோன்றி லிங்கமென  தமியரிடை யங்கமென ,
தாங்கொரகை தங்கியருளும்,
தான்தோன்றி ஈசனே! அமிர்தவலி உடனுறையும்,
தம்பதிச மேதபோற்றி!


4
அற்றதெது வறாததெது அன்புக்குத் தேவையெது
என்பதறி யாதுபடித்தேன்;
அம்மையப்பர் பணியில் அகத்தைச் செலுத்திடா
அறியாமைக் கல்விபடித்தேன்;
உற்றதைச் செய்யாது உறாததைச் செய்கவெனும்
உபாயமறி யாமல்படித்தேன்;
உள்ளொன்று மறைத்துவைத் துதடுபே சும்மென்ற
உலகநெறி தனைப்படித்தேன்;
கற்றதன் படியொழுகி நடவா திருக்கவெனும்
கற்பனை தனைப்படித்தேன்;
கல்நெஞ்சு கொண்டுபிறர் கண்ணீரில் மல்கவெனும்
கயமைவழி தனைப்படித்தேன்;
தெற்றிதெனத் தெரிந்தேயத் தீமையது  படித்ததால்
மற்றுநீ வரத்துடித்தேன்;
தான்தோன்றி ஈசனே அமிர்தவலி உடனுறையும்
தம்பதிச மேத போற்றி!
5
தந்தைக்கு நிகராக வழிகாட்டவருமெவரும்
தயங்கிடும் படிவளர்ந்தேன்;
தாலாட்டும் அன்னையின்  ஈடில்லா அன்புக்குத்
தவித்திடும் படிவளர்ந்தேன்;
நிந்தைக்கு ஆளாகா நெறிகாட்டிக் கற்பிக்கும்
நியமமில் லாதுவளர்ந்தேன்;
நியாயமனி யாயமெது என்பதனை ஓர்ந்தறியும்
மதியதி லாதுவளர்ந்தேன்;
வந்தேய்த்து வருந்தற்கு வாதம்செய் வாருரைக்கும்
வாக்குநம் பியும்வளர்ந்தேன்;
வாராத இடர்களிலை; சேராத துயர்களிலை;
வருவதினி ஒன்றுமில்லை;
தந்தையே நீயாக தாள்காட்டு வாயாக
தானென்று சரணடைந்தேன்;
தான்தோன்றி ஈசனே அமிர்தவலி உடனுறையும்
தம்பதிச மேதபோற்றி!


6
நன்மையிது தீமையெனும் அறிவிலா வாழ்வுதனை
நன்றென்று நானும்வீழ்ந்தேன்;
நல்லோர்கள் நீதிமுறைச் சொல்லேதும் கேட்காத
நயவஞ்ச னாகவீழ்ந்தேன்;
பன்மையிற் பேசுபண் பாடினை இகழ்ந்துவரும்
படியொருமை பேசிவீழ்ந்தேன்;
பல்லோரும் பரிதவிக்கப் பாவியென் றெனையழைக்கப்
படுகொலைகள் செய்துவீழ்ந்தேன்;
எண்ணிலாச் சொத்துக்கு இதுவுமொரு வழியென்று
கொள்ளைகள் செய்துவீழ்ந்தேன்;
ஏழையரும் கோழையரும் ஏங்கிநிதம் அழுதிருக்க
ஏதங்கள் செய்துவீழ்ந்தேன்;
தன்மையதி லாதபடி தருக்கனாய் வாழ்ந்தபடி
யாலுன்னைத் தேடுகின்றேன்;
தான்தோன்றி ஈசனே! அமிர்தவலி உடனுறையும்
தம்பதிச மேதபோற்றி!




7

காலாலே மிதித்தவனைக் கண்ணப்ப எனவழைத்து,
கருணைமழை யில்நனைத் தாய்!
கல்லாலே எறிந்தவனைக் கடைக்கண் விழிதிறந்து,
கவினருளில் பொலியவைத் தாய்!
கோலாலே அடித்தவனைக் குறையொன்றும் சொல்லாது,
குடிமக்கள் புகழவைத் தாய்!
வில்லாலே எய்தவனை வீரனே எனவியந்து,
வேண்டியதை நீயளித் தாய்!
ஏலேலோ பாடிநிதம் கயல்விற்ற பெண்மகிழ,
என்னவளே எனவழைத் தாய்!
ஏகடியம் பேசிடினும் ஏலாமை ஆற்றிடினும்,
என்னையும் நேர்செய்கு வாய்!
தாலேலோ பாடுநிகர் தாயன்பின் தூயவநின்
தண்ணருட் தாள்பணிந் தேன்!
தான்தோன்றி ஈசனே! அமிர்தவலி உடனுறையும்
தம்பதிச மேதபோற்றி!


8
பசியாலே பதறியது பச்சிளம் சிறுவனெனப்
பாலமுது தந்தாற்றினை!
பழியுற்ற தக்கனாம் தந்தையைத் திருத்தவெனப்
படைகொண்டு போராடினை!
நிசியென்று என்மனது மசியா திருக்கவென
நெடுஞ்சூல மேற்றாண்டனை!
நெறிகெட்ட சூரர்தமக் கறிவூட்ட வேண்டுமென
நின்சக்தி வேலளித்தாய்!
வசைவந்தி டாவாழ்வு வாழுதற் காவதென
பசைமஞ்சள் பூசவைத்தாய்!
வாட்டுகிற நோயறவும் வீடும்நிறை வாகுமென
வேம்புவை நுகரவைத்தாய்!
இசைகேட்டு ஆடுகிற எழில்மயிலை வெல்லுமென
விசையாக ஆடுநிலவே!
இன்னமுது எனுமுனது அருளீய வருகவென
அமிர்தவலி வேண்டுகின்றேன்!


9
நிலவுநீ! கதிரும்நீ! நிறைவாக ஒளிருகிற,
விண்மீனும் நீயல்லவோ!
நினைக்கின்ற தூரமும் நீங்காது படருகிற,
நெடுவானும் நீயல்லவோ!
குலவுகிற தென்றல்நீ! கொடிதாகச் சுழலுகிற,
கொடும்புயலும் நீயல்லவோ!
குன்றுநீ! மலையும்நீ! குளிர்தருக்கள் சூழுகிற,
கொடுங்காடும் நீயல்லவோ!
அலைதவழ் கடலும்நீ! அகலாது விரிகின்ற,
அகண்டமும் நீயல்லவோ!
ஆதிநீ! அந்தம்நீ! அனைத்தையும் சுமக்கின்ற,
ஆதிபரா சக்தியலவோ!
கலைமகளும் அலைமகளும் கனிவாக வணங்குகிற,
மலைமகளும் நீயல்லவோ!
கதியுனது பதகமலம் காக்குமெனப் போற்றுகிறேன்!
கண்பாரும் அமிர்தவல்லீ!

10
சக்திநீ! சலங்கையுடன் எத்திசையும் நடனமிடும்,
சர்வாம்பி கையுமலவோ!
சாத்திரம் காணாத சரித்திரம்  சான்றுசொலும்,

மூத்தவளும் நீயல்லவோ!

முக்திநீ! நத்தியுனை முனைவார்க்கு அருள்புரியும்,
சித்தியவள் நீயல்லவோ!
மூலிநீ! நீலிநீ! மூவுலகும் காத்திருக்கும்
காளியவள் நீயல்லவோ!
பக்திநான் செய்திடவும் பரமனடி எய்திடவும்,
பரிவதுவும் நீயல்லவோ!
பணிவோர்க்கு அருளுவதும் பாவங்கள் நீக்குவதும்,
பார்வதி நீயல்லவோ!
திக்கிலா ஏழைநான் தொழுகிறேன் அன்னையுன்
தூவடி போற்றிதாயே!
தான்தோன்றி ஈசனின் உடனுறையும் தேவியே
தயவீயும் அமிர்தவல்லீ!


No comments:

Post a Comment