Pages

Friday, February 7, 2014

74-InbamE unhdhan pEr





நமது முன்னோர்கள் சொல்லியுள்ள விஷயங்களின் தொகுப்பு  ! இது காதல் கடிதம் அல்ல ! ஆனால் கடிதம் தான் ! கொஞ்சம் சாயம் பூசி இருக்கிறேன்  ! ! யாருக்கு எழுதப் பட்டது , என்று கண்டுபிடியுங்கள் , பார்ப்போம்  !

1
அன்பே ! எவர் ஒருவரையும் விட்டுவைக்காமல் , அனைவரையும் அரவணைத்து அன்பு காட்டுவதால் , உன்னை அன்பே என்றேன் ; எந்நிலையிலும் நேர்மை தவறாத நீதியரசர் உன் தந்தை  ! பரிந்துரை கையூட்டு பச்சாதாபம் ஆகிய எவற்றுக்கும் பணிந்துவிடாத நல்ல நிர்வாகம் உங்கள் ஆட்சியில் ; பாயும் , பகையுமே உங்கள் பரிவாரங்கள் ! எல்லையற்று பரந்து விரிந்த , நிலையான ஒருஅமைதி சாம்ராஜ்ஜியத்தின் இளவரசி நீ  ! ஆனாலும் முடிசூடிக்கொண்ட , ஒரு மஹாராணிக்குரிய சகல அதிகாரங்களையும் உடையவள் நீ ! எஃகினால் ஆனதல்ல  ; ஆனாலும் , உள்ளிருந்து , யாரும் தப்பிவிட முடியாத கோட்டை உன் கோட்டை ! உனது வயது என்னவென்று எவருக்கும் தெரியாது ! ஆனாலும் நீ இளையவள் ! உனது மூத்தவளுக்கோ எப்போதுமே ஒரே வயது தான் ; கண்ணே   ! கண்ட அளவிலேயே தண்டனையை முடிவு செய்யும் கண்கள் உன்னவை என்பதால் க்ண்ணே என்றேன்  ! பிறப்பின் மூல விதையே நீதானென்று , தத்துவம் சொல்வார்கள் : ஆனால் அந்த விதை முளைக்காமல் இருக்க என்ன வழி என்று யாரும் பக்குவம் சொல்லவில்லை  ! நீ இல்லாத வாழ்வே பெருவாழ்வு என்று சிலர் பிதற்றுவார்கள் ; ஆனால் நீயே தான் அந்தப் பெருவாழ்வு என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள் அவர்கள்  ! உன்னைப் படுகுழி என்று சொல்லிப் பிறரைப் பயமுறுத்துவார்கள் ; அதைவிடப் பெரும்பள்ளங்களைப் பாராதவர்கள் அவர்களாயிருப்பார்கள  ! இன்பமே  ! பேரின்பத்திலும் பெரும் இன்பமான உன் மயக்கம் என்னை அப்படி அழைக்க வைத்தது  ! காதலை முன்னிறுத்தியும் , உன்னைப் பின்னிறுத்தியும் , கவிதை பாடினான் , கவிஞன் ஒருவன் ; உன் அருமை தெரியாதவன் ! உன்னையல்லவா , அவன் முன் நிறுத்தியிருக்க வேண்டும் ? துரக்கமாகிய உன்னை , உறக்கத்துக்கு ஒப்பிட்டுப் பாடினான் , வேறொரு புலவன்   ! உனக்குப் பின்னே தான் துரக்கமென்று , உணராதவன்  !  குறிப்பிட்ட நேரத்தில் , நீ வருவதால் , உன்னைக் காலம் தவறாதவள் என்று குறிப்பிடலாம் ! நான் நினைத்த நேரத்தில் நீ வருவதில்லையாதலால் , தாமதிக்கப் பட்ட நீதி என்று , உன்னை எடுத்துக் காட்டலாம்  !
ஆண்டான் அடிமை என்று எவருக்கும் நீ வேறுபாடு காட்டுவதில்லையாகையால் , உன்னைச் சமநீதியரசி என்றும் சொல்லலாம் ! எல்லோருக்கும் ஒரு துணை வேண்டும் என்பார்கள்  ! ஆனால் , நீயும் உன் முன்னவளும் மட்டும்தான் துணைக்கு என்று வேறு யாரும் தேவை இல்லாதவர்கள்  !

கேள்வி இன்னும் முடியவில்லை ….


2
தென்றலே ! உன் அணைப்பின் அமைதி தரும் குளுமை தென்றலைப் போன்றது என்பதால் , தென்றலே என்றேன்  ! உன்னைப் பார்க்காமலேயே உன்னைப் பார்த்துச் சிரித்ததாக சிலர் ஜம்பம் பேசுவார்கள் ! அவர்கள் உன்னைப்பார்த்திருந்தால் திரும்பியே இருக்க மாட்டார்கள் ! ஏன் எனில் உன் பிடி அப்படி ! உன் அணைப்பின் வலி கொடுமையானது என்று எல்லோரும் பயப்படுகிறார்கள் ; வாழ்க்கையின் நொடிகளில் விழும் அடிகளின் வலி அதைவிடக் கொடியது என அறியாதவர்கள் அவர்கள் ! என்மூச்சுக் காற்று உன்னோடு , கலக்கும்போது பெறும் ஆனந்தம் வேறு எதற்கும் ஈடாகுமா ? எல்லோரும் உன்னைக் கண்டு கலங்கி அழுவர் என்ர நிலையில் , யுத்த பூமியில் , கட்டித் தழுவி உன்னை முத்தமிட்டு மகிழும் , போர்வீரர்களுக்கு அடுத்தபடியாக உன்னில் கலந்து மகிழும் முதல் மனிதன் நானாகத்தான் இருப்பேன்  ! ஆனால் ஒரு சிலரோ வலுவில் உன்னை அடைந்துவிட்டதாகக் கூறிக் கொள்வர்  ! உன் அனுமதி இல்லாமல் அடைந்துவிட்ட  
அவர்களால் உன் கன்னித் தன்மைக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதாக நான் கருதவில்லை ! உயிர்களெல்லாம் உன்னுள் அடக்கம் என்றாலும் , உன் அடக்கம் , வேறு யாருக்கும் வருவதில்லை ! ஏனென்றால் , நீ உன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை  ! அன்பே  ! தாயின் அரவணைப்பில் கிடைக்கும் இதமும் , தாரத்தின் அணைப்பில் கிடைக்கும் கதகதப்பும் , உன்னிடம் மட்டுமே கிடைக்கும்  ! வேறு யார் தரும் சுகமும் , நீ தரும் சுகத்திற்கு ஈடாவதில்லை  ! ஏனென்றால் , சுகம் தரும் அத்தனையையும் , சுவீகரித்துக் கொண்டவள் நீ  ! நீ என்ன அவ்வளவு கோரமானவளா ? உன்னைப் பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள் !  புறத்தைப் பார்த்த அவர்கள் உன் அகத்தைப் பாராதவர்கள் ! உன்னை இப்படியெல்லாம் வர்ணிக்கும் என் புகழ்ச்சியில் , மயங்கி என்னை மறந்து விடாதே  ! புகழ்ச்சியின் போதையில் மயங்குபவளல்ல நீ ! ஆயினும் சொல்லி வைத்தேன்  ! காலம் கனியட்டும்  ! காத்திருப்போம் , அதுவரை   !  என்ன நெளிகிறாய் ? அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து விட்டேன் என்றா ? இல்லையா ? பின் ஏன் ? …..என்ன ? இவ்வளவு சொல்லியும் , நீ யார் என்று தெரியாமலும் , புரியாமலும் , ஒருவனா ? ஐயோ ! பாவம் அவன் ! விட்டு விடு  ! போகட்டும் ! உன்னை நினைக்கவும் , உன்னை நெருங்கவும் ,அவனுக்கு வயதும் அனுபவமும் போதாது ! என்று நினைக்கிறேன் ! அதுவரை காத்திரு ! உனக்குத்தான் தெரியுமே ! அவனுக்கு இன்னும் நேரம் வரவில்லையென்று  ! அனைத்து நாட்டுச் சட்டங்களின் படியும் குற்றம் என்று தெரிந்தும் உன்னை வலுவில் அடையத் துணிகிறார்கள் சிலர்  ! என்ன செய்தாலும் , விதி விடாது ; அவர்களின் வினை  எப்போதும் பின் தொடரும் என அறியாதவர்கள்  ! அதிலிருந்து மீள வழி தேடாதவர்கள் ! வாழ்க்கையை எதிர்கொள்ளத் துணியாத கோழைகள்  ! 

No comments:

Post a Comment