Pages

Wednesday, August 12, 2015

90-arulmiku veerabaiyammaal



சிந்தலக்கரை ருள்மிகு வீரபையம்மாள் 
----------------------------------------
கணமும் நிலையாத  கனவுகளை  நிஜமென்றோம்;
கண்ணால் கண்டாலும் நிகழ்வுகளை நிழலென்றோம்;
கானல் நீராகும் ஆசைகளை மெய்யென்றோம்;
கருத்தால் அறிந்தவிதி யாவையுமே பொய்யென்றோம்
காரண மாய்நின்ற கடவுளையே இல்லையென்றோம்;
கண்ட படிநடந்து வருவதனைத்  தொல்லையென்றோம் ;
மண்ணாய்ப் போகின்ற மேனியினை அழகென்றோம்;
மமதைத் தலைக்கேறி மேதினியில் அழிகின்றோம்;
மரணம் தனையெண்ணி மதியிழந்து வாடுகிறோம் ;
தருணம் தெரியாமல் தருக்கினிலே ஆடுகிறோம்;
கிலியில்  நாள்தோறும் கிடந்தே  உழல்கின்றோம்;
கீரிப்  பாம்பெனவே இடரினிலே புரள்கின்றோம்;

குதர்க்கம் பேசுகிறோம்; குற்றம் கூறுகிறோம்;
குறிக்கோள் இல்லாமல் கூனிக்   குறுகுகிறோம் ;
மதிமயங்கி  நிற்காமல்  மயக்கம்  தவிர்த்திடுவோம்  
கதிகலங்கி  வருந்தாமல் கருத்தில் புகுத்திடுவோம் ;
ஆடும் மனமடக்கி ஆசைகளைப் புதைத்திடுவோம் ;
ஓடும் கால்நிறுத்தி உயர்வதையே விதைத்திடுவோம் ;
நெறியில் கருத்தூன்றி நிலைகாண வழிகாண்போம்;
நீடு வாழ்வதற்கு நிலையான ஒளிகாண்போம் ;
அன்னை கதியென்றே அவள்நோக்கிக் கைகுவிப்போம்
அனைத்தும் அவளென்றே அடிபணிந்து தினம் துதிப்போம்;
எல்லாம் அவளென்றே  எண்ணிச் சரணடைவோம் ;
ஏற்க எமைஎன்றே  எந்நாளும் பண்ணிசைப்போம் ; 

அல்லல் தமையகற்றி ஆறுதலைத் தந்திடுவாள்;
ஆதரவுக் கரம்நீட்டி அன்பருக்கே முந்திடுவாள்.
இல்லம் இனிமைபெற எண்ணியன முடித்திடுவாள்;
ஈட்டிய வளம்சேரத் தடுப்பனவை தடுத்திடுவாள்.
உள்ளம் வலிமையுற உற்சாகம் சேர்த்திடுவாள்;
ஊக்கம் ஊற்றெடுக்க ஒவ்வாமை தீர்த்திடுவாள்.
என்றும் துணை நிற்பாள், எதிர்ப்பாரை வென்றிடுவாள்;
ஏகும் வினைமாய எதிர்நிற்கச் சென்றிடுவாள்.
ஐயம் நீக்கிநமை ஆற்றலுறச் செய்திடுவாள்;
ஒளியாய் வழிகாட்டி, அருள்மழையே பெய்திடுவாள்.
ஓடம் எனக்கடலாம் வாழ்விற்கரை சேர்ப்பதற்கு ,
ஔடதமாய் பையம்மாள் அருகிருக்க பயமெதற்கு?




No comments:

Post a Comment