எண்ணாதஎண்ணமெல்லாம்............
( முதுமையில் வரும் உளறல்கள்; இது எல்லோருக்கும் தான் )
குடை நிழலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர்!
யானை மேல் ஏறி சவாரி செய்தவன் , முதுமை வந்தபிறகு
நடக்க முடியாமல் நடந்து ஊர்போய்ச் சேர்வானோ ?
இல்லை பாதியிலேயே பயணத்தை முடித்துக் கொள்வானோ?
காலம் மலையை மடுவாக்கும் !
மடுவை மலையாக்கும் !
யாரும் தங்கள் நிலையை மறக்காதவரை எல்லாம் சரியா
கத்தான் இருக்கும் !
மறக்கின்ற போதுதான் தொல்லைகள் தொடங்கும் !
மணம் முடித்துவைத்தாலும் மாறமாட்டேன் என்பவர்களும்
மாறிவிடுவார்கள்! மாறிவிடுவோமோ என்று பயப்படு கின்றவர்கள் ஒருவேளை மாறாமற் போனாலும் போய் விடுவார்கள்!
காணாததைக் கண்டவர்கள்! கண்டும் காணாதவர்கள்!
ஜம்பம் புடவை கட்டிக் கொள்ளும்!
இருட்டைப் போக்க,விளக்கு ஏற்றும் மருமகளும் வருவாள்!
எரியும் விளக்கை அணைக்கும் மருமகளும் வருவாள் !
பழையதைத் தூக்கிப் போடுகிறேன் என்று பழையவர்களையும்
தூக்கி எறிந்து விடுவார்கள்!
ஒருசமயம் பேரன் பிறந்து கவிதை வடிக்க வைப்பான் !
மற்றொருசமயம் பேத்தி பிறந்து கண்ணீர் வடிக்க வைப்பாள் !
புலி பூனையாகி விடும் !
எலி பாம்பாகி விடும் !
ராஜா சேவகனாகி விடுவான் !
சேவகன் ராஜாவாகி விடுவான்!
ஜால்ரா சதங்கை கட்டிக் கொள்ளும் !
சதங்கை குப்பையில் ஒட்டிக் கொள்ளும்!
உறவு பகையாகும் ; பகை உறவாகும்!
சொந்தம் அந்நியமாகிப் போகும்!
சிங்கம் அசிங்கமாகி விடும் !
அப்படித்தான்
அரியணையில் அமர்ந்திருக்கும் நம்மை மனையில்
உட்கார்த்தி,மூக்கறுத்து விடுவார்கள் !
பிச்சை போட்ட நம்மை பிச்சைக்காரனாக்கி விடுவார்கள் !.
என் நிலையை நான் எண்ணிப் பார்க்கின்ற போது ,
"கலையைப் படிச்சவன் காத்தாப் பறக்குறான் ,
காக்கா புடிக்கிறவன் காரில் பறக்குறான் ,
குலமகள் ராதை கூழைக் குடிக்கிறா ,
கூறுகெட்டுப் போனவ கும்மாளம் போடுறா" , என்ற
பழைய திரைப் படப்பாடல் ஒன்றுதான் ,நினைவுக்கு
வருகிறது!
காலம் மாறும் என்று புரிந்துகொண்டால் நடத்தை மாறாது!
இருப்பதும் போகாது!
அதைப் புரிந்து கொள்ளாதவர்கள் அதன் பலனை
அறுவடை செய்து பரிதவிக்கிறார்கள் !
ஊழையும் உப்பக்கம் காண்பர் என்ற அதே வள்ளுவர் தான்
ஊழிற் பெருவலி யாவுள என்றும் சொல்கிறார்!
ஆக வாழ்வதும் வீழ்வதும் நம் கையில்தான்!
பிறவி என்ற இந்த பயணத்தில் , நம்மோடு பயணித்த நமது
பெற்றோர் ,மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் என
எல்லோரும் ஒருநாள் நம்மைப் பிரிகின்றவர்கள் தான்!
அவர்கள் முன்னாலேயே நம்மைப் பிரிந்துவிடுவதால் ,
என்ன இழப்பு ஏற்பட்டு விடப் போகிறது?
என்ன கொண்டுவந்தோம் ?அதைக் கொண்டுபோவதற்கு !
யாரோடு வந்தோம் ?அவரோடு போவதற்கு! .என்ற கீதை
வரிகளை எண்ணி ஆறுதல் கொள்ள வேண்டியது தான்!




No comments:
Post a Comment